💰2029 வரை டொனால்ட் ட்ரம்பைப் பொறுமையுடன் எதிர்கொள்ள ஈரான் திட்டம்: மூத்த ஆலோசகரின் அதிரடி வியூகம்! 🇮🇷🇺🇸
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நேரடி போரிலோ அல்லது எந்தவித உடன்படிக்கையிலோ ஈடுபடாமல், அவரது பதவிக்காலம் முடியும் வரை பொறுமையைக் கடைப்பிடிப்பதே ஈரானுக்குச் சிறந்த வியூகமாக இருக்கும் என ஈரானிய நாடாளுமன்ற மூத்த ஆலோசகர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹம்மத் பாகர் காலிபாஃபின் ஆலோசகரான மஜித் ஷாகேரி, ட்ரம்பின் தற்போதைய பதவிக்காலம் நிறைவடையும் 2029 ஜனவரி 20 ஆம் திகதி வரை ஈரான் தனது தற்போதைய நிலைப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
📌 “போரும் இல்லை, அமைதியும் இல்லை”
தமது நிலைப்பாடு குறித்து விளக்கியுள்ள மஜித் ஷாகேரி, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ட்ரம்பிற்கு மட்டுமே அரசியல் ரீதியாகப் பயனளிக்கும் என்றும், அது ஈரானின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்த போரில் வெற்றி பெறுவதற்கான வழி வெறும் சண்டையிடுவது அல்லது ஒரு புரிந்துணர்வை எட்டுவது மட்டும் அல்ல. வெற்றிபெறும் வரை ‘போரும் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற சூழலை நிர்வகிப்பதே சரியான அணுகுமுறையாகும். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை பகிரங்கமாக உறுதிப்படுத்துவது தவறான முடிவாகும்,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
🚢 நேரடிப் பேச்சுவார்த்தைகளை மறுக்கும் ஈரான்
இதனிடையே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திங்கள்கிழமை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். மத்தியஸ்தர்கள் மூலமாகவே செய்திகள் பரிமாறப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையின் தற்காலிகக் கப்பல் பாதை தொடர்பில் ஓமான் நாட்டுடன் மட்டுமே தெஹ்ரான் பேச்சுவார்த்த நடத்தி வருவதாகவும், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு ஈரானே முழுப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கு 300 பில்லியன் டொலர் நஷ்டஈடு, பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் போன்ற கடுமையான நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
♟️ “அரைகுறை பேச்சுவார்த்தை” என ட்ரம்ப் கருத்து
அதேவேளை, ஈரானின் கூற்றுக்கு மாறாக அமெரிக்கா ஈரானுடன் “அரைகுறையாகப் பேச்சுவார்த்தை” (semi-negotiating) நடத்தி வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக ஈரான் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், “இது ஒரு சதுரங்க ஆட்டம் போன்றது, இறுதியில் அனைத்தும் சரியாக அமையும்,” எனக் கூறியுள்ளார். எனினும், 2029 வரை ட்ரம்பிற்கு எந்தவொரு ஒப்பந்தத்தையும் வழங்காமல் ஹோர்முஸ் நீரிணையை அழுத்தத்தில் வைப்பதே ஈரானின் உண்மையான திட்டமாகத் தெரிகிறது.
#Iran #USNews #DonaldTrump #MiddleEastCrisis #StraitOfHormuz #WorldNews #Geopolitics #TamilKlik

