🚨 🌍 🇪🇺 “உக்ரைனுக்கு அடுத்து மேலும் 4 நாடுகளைத் தாக்க ரஷ்யா தயார்?”… மூன்றாம் உலகப் போர் குறித்த எச்சரிக்கையால் பரபரப்பு!
உக்ரைன் மீதான நான்கு ஆண்டுகாலப் போரில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தடுமாறி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தற்போது மேலும் நான்கு நாடுகளைத் தனது புதிய இலக்குகளாக மாற்றுவதற்குத் திட்டமிட்டு வருவதாக லிதுவேனியா அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. லிதுவேனியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட்டாஸ் கௌனாஸ் மற்றும் அதிபர் கிடானாஸ் நௌசேதா ஆகியோர் இத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
📌 புட்டினின் அடுத்த இலக்கு எது?
லிதுவேனியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட்டாஸ் கௌனாஸ் ஊடகமொன்றுக்குத் தெரிவிக்கையில், பால்டிக் பிராந்திய நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளே ரஷ்யாவின் அடுத்தகட்ட இலக்குகளாக அமையக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போர் ரஷ்யா எதிர்பார்த்தபடி நகரவில்லை என்றும், ரஷ்யாவிற்குள் தற்போது வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் கிரெம்ளின் நிர்வாகத்தைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“வாக்களிக்கப்பட்ட வெற்றி எங்கே என்று ரஷ்ய மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். எனவே கிரெம்ளினுக்கும் அதிபர் புட்டினுக்குமொரு புதிய தீவிரபோக்கும், ஏதேனுமொரு வெற்றியும் தேவைப்படுகிறது. அதற்கு அவர்களுக்கு மிக அருகில் உள்ள இலக்குகள் பால்டிக் பிராந்தியமும் போலந்துமே ஆகும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
🛡️ நேட்டோவைச் சோதித்துப் பார்க்கத் திட்டம்
நேட்டோ (NATO) அமைப்பின் பலத்தைச் சோதித்துப் பார்க்கும் நோக்கில், போலந்து அல்லது பால்டிக் நாடுகளில் ரஷ்யா போரைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நௌசேதா தெரிவித்துள்ளார்.
மரபுவழி இராணுவத் தாக்குதல்கள் அல்லது கலப்புப் போர்முறை (Hybrid tactics) மூலமாக முக்கியமான உட்கட்டமைப்புகளை ரஷ்யா தாக்கக்கூடும் என உளவுத்துறைத் தகவல்கள் எச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக பாலங்கள், மின்சார துணை நிலையங்கள், எரிவாயு விநியோக அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளைச் சுற்றி பாதுகாப்பை லிதுவேனியா பலப்படுத்தியுள்ளதுடன், சாத்தியமான ரஷ்யத் தாக்குதலுக்கு எதிரான அவசரத் திட்டங்களையும் வகுத்து வருகிறது.
✈️ போலந்தின் குற்றச்சாட்டும் போர் விமானங்களின் நடவடிக்கை
இதனிடையே, உக்ரைனிய ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா ‘பொய்ப் பிரசாரத் தாக்குதல்’ (False flag operation) ஒன்றை நடத்தக்கூடும் என போலந்து வெளியுறவு அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி எச்சரித்துள்ளார்.
அண்மையில் பால்டிக் கடலுக்கு மேலே பறந்த ரஷ்யாவின் ‘Il-20’ ரக விமானத்தை இடைமறிக்க போலந்து தனது போர் விமானங்களை அவசரமாக அனுப்ப வேண்டியிருந்தது. அந்த ரஷ்ய விமானம் விமானப் பயணத் திட்டத்தை சமர்ப்பிக்காமலும், டிரான்ஸ்போண்டரை (Transponder) அணைத்து வைத்தும் சர்வதேச வான்வெளியில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக போலந்து ஆயுதப்படைகளின் செயல்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
📝 கிரெம்ளின் மறுப்பு
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யாவின் கிரெம்ளின் நிர்வாகம் முற்றாக நிராகரித்துள்ளது.
“பொதுமக்களின் மூளையைச் சலவை செய்து, பிராந்தியத்தை இராணுவமயமாக்குவதற்காகப் பரப்பப்படும் பயமுறுத்தும் கதைகளின் மற்றொரு தொகுதியே இது,” என ரஷ்யா தெரிவித்துள்ளது.
#WW3 #RussiaUkraineWar #VladimirPutin #Lithuania #Poland #NATO #WorldNews #Europe #TamilKlik

