🌾 ☀️ஒரே ஆண்டில் 4 கடுமையான வெப்ப அலைகள்… பிரித்தானியாவில் உணவுப் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் எச்சரிக்கை! 🇬🇧

UK 'facing food shortages' after four heatwaves in a single year as drought hits critical crops

🌾 ☀️ 34C வரை உயரும் வெப்பநிலை… பிரித்தானிய விவசாயத் துறையைப் பாதிக்கும் நீர் தட்டுப்பாடு! 🇬🇧

பிரித்தானியாவில் நீடித்து வரும் கடும் வறட்சி மற்றும் தொடர்ச்சியான வெப்ப அலைகள் காரணமாக நாட்டின் விவசாயத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இங்கிலாந்தின் அரைப்பகுதி உத்தியோகபூர்வமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு பிராந்தியங்களுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் (34C) வரை மீண்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📌 வளர்ச்சியிழக்கும் பயிர்கள்: தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

தொடர்ச்சியாக நிலவும் கடும் வெப்பம் பயிர்களின் வளர்ச்சியைப் பாதித்துள்ளதுடன், ஆண்டு விளைச்சலில் எஞ்சியவற்றைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யாததால் கோதுமைப் பயிர்கள் வழமையான உயரத்தில் பாதியளவே வளர்ந்துள்ளன. ஓட்ஸ் (oats) உற்பத்தியும் இந்த ஆண்டு மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் (NFU) தலைவர் டொம் பிராட்ஷோ (Tom Bradshaw) தெரிவித்துள்ளார்.

கோடையின் தொடக்கத்திலிருந்து பலமுறை தாக்கிய வெப்ப அலைகள், மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சி தாவரங்களின் விரைவான நீர் இழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

⚠️ அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கைகள்

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டொம் பிராட்ஷோ, நீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு விவசாயிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிபிசி ரேடியோ 4 (BBC Radio 4) சேவையிடம் பேசிய அவர்: “நாம் நமது உணவு விநியோகத்தை மிக நீண்ட காலமாக அலட்சியப்படுத்தி வந்துள்ளோம். நாம் உணவிற்காக நம்பியிருக்கும் ஏனைய நாடுகளின் காலநிலையும் மாறி வருகிறது. இதனால் நாட்டில் சில உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது,” எனத் தெரிவித்தார். மேலும், நீர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு முக்கிய பகுதி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாத்தியமான இடங்களில் புதிய நீர்த்தேக்கங்களை அமைப்பதன் மூலம் குளிர்கால மழைநீரைச் சேமித்து வைக்க அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📉 வரலாற்றுச் சாதனை பதித்த குறைந்த மழைவீழ்ச்சி

வானிலை அவதானிப்பு மையத்தின் (Met Office) தரவுகளின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில் ஜூலை 30 வரை வெறும் 5.6 மி.மீ மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இது ஜூலை மாதத்திற்கான சராசரி மழைவீழ்ச்சியில் வெறும் 8 சதவீதம் மட்டுமே ஆகும்.

இந்த பதிவானது, 1911 ஆம் ஆண்டு பதிவான 13.4 மி.மீ என்ற வரலாற்று குறைந்த மழைவீழ்ச்சி சாதனையை விடவும் பாதியளவு குறைவாகும். வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்படாத வேல்ஸ் (Wales) பிராந்தியத்திலும் சராசரியாக 8 சதவீத மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

🥛 கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

கடும் வெப்பம் பால் பண்ணை விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. அதிக வெப்பம் காரணமாக கால்நடைகள் உணவு உண்பது குறைவதோடு, பால் உற்பத்தியும் கணிசமாகக் குறைகிறது.

டோர்செட் (Dorset) பகுதியைச் சேர்ந்த பால் பண்ணை விவசாயி சோஃபி கிரகரி (Sophie Gregory) இது குறித்துக் கூறுகையில், தமது பண்ணையிலுள்ள 600 பசுக்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளதாகத் தெரிவித்தார். காலநிலை மாற்றம் விவசாயத்தை மென்மேலும் கடினமாக்கி வருவதாகவும், பூகோள ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதே வெப்ப அலை தீவிரமடைவதைத் தடுப்பதற்கான ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

#UKNews #UKDrought #UKHeatwave #UKAgriculture #FoodShortage #ClimateChange #UKWeather #SriLankanTamilNews #TamilKlik