🌊 🇮🇷 கஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்… இஸ்ரேலின் தூண்டுதலிலேயே உக்ரைன் இயங்கியதாக ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு!
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், கஸ்பியன் கடல் பிராந்தியத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. கஸ்பியன் கடலில் பயணித்த ஈரானின் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் வழிகாட்டலிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
📌 கஸ்பியன் கடலில் நடந்தது என்ன?
கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து, மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தெஹ்ரானில் உள்ள உக்ரைனின் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு, ஈரானிய வெளியுறவு அமைச்சு தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தாக்குதல் ஐக்கிய நாடுகள் சபையின் 2(4) சாசன விதியை மீறும் செயல் எனவும், இது ரஷ்யா-உக்ரைன் போரை மேலும் விரிவுபடுத்தும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
💬 🇮🇷 ஈரானின் கடுமையான எச்சரிக்கை
இந்த விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரதானி காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோருடன் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான ஆதாரங்கள் எதையும் வெளியிடாத நிலையிலும், எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அப்பாஸ் அராக்சி:
“ஐரோப்பிய நாடுகளைப் போருக்குள் இழுக்கும் நோக்கில், இஸ்ரேலின் தூண்டுதலிலேயே கெய்வ் (Kyiv) நிர்வாகம் இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது,” என எச்சரித்துள்ளார்.
📈 🇺🇦 உக்ரைனின் பதில் மற்றும் கஸ்பியன் கடலின் முக்கியத்துவம்
மறுபுறம், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி, கஸ்பியன் கடல் பகுதியில் நீண்டதூரம் பாயும் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் படைகள் மிகச் சிறந்த இலக்குகளை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் தொடர்புடைய இராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல் என்பனவற்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ள போதிலும், ஈரானின் வர்த்தகக் கப்பல் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தோ அல்லது இஸ்ரேலின் தலையீடு குறித்தோ எந்தவொரு கருத்துகளையும் குறிப்பிடவில்லை.
ஈரானைப் பொறுத்தவரை தெற்குப் பகுதியில் ஓமான் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் கண்காணிப்பும், செங்கடல் பகுதியில் கூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களும் நிலவிவரும் சூழலில், கஸ்பியன் கடல் பிராந்தியமே அதன் பாதுகாப்பான வர்த்தக மற்றும் இராணுவ விநியோகப் பாதையாக விளங்கியது.
தற்போது அந்தப் பாதையிலும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளமை ஈரானின் பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உக்ரைனின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் தம்மிடம் இருப்பதாக ஈரானிய அரச ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Iran #Ukraine #Israel #CaspianSea #VolodymyrZelenskyy #MiddleEastConflict #WorldNews #TamilKlik

